Skip to main content

ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை துணைத்தலைவர், உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டம் தொடங்கிய உடனே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதுமிதா மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத நிலை தற்போது உள்ளது. 


அதுபோல ஊராட்சி மன்ற தலைவரின் தன்னிச்சையான போக்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடையே மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஊராட்சி தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊராட்சி துணை தலைவர் மதுமிதா தலைமையில் வார்டு உறுப்பினர்கள் அன்பழகன், மாலிக்கபூர் உள்பட கூட்டத்திற்கு வந்திருந்த வார்டு உறுப்பினர்கள் 7 பேர் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். 

இதற்கிடையே கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களில் ஒருவர் ஊராட்சி தலைவர் பாண்டியம்மாள் பதவிக்கு வந்த பிறகு பல கோடி மதிப்பீட்டில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அதற்கான பத்திர ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்திற்கு பார்வையாளராக வந்திருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் சம்மந்தப்பட்ட கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார். இதுபோன்ற சம்பவங்களால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
........................

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments