Skip to main content

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா: கலெக்டர் ஷஜீவனா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது குடியரசு தினவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 26.1.2024 அன்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றிவைத்து, மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு, போலீசார் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தும், சிறப்பாக பணியாற்றிய  காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், 64 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்  முன்னிலை வகித்தார்.


விழாவில் போலீஸ் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 67 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், முதலமைச்சரின் விரிவான காப்பீடு மற்றும் ஒருங்கிணைந்த பிரதம மந்திரியின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக சேவையளித்த 2 மருத்துவமனைகளுக்கும், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 3 அலுவலர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்ற 17 ஆசிரியர்களுக்கும், படைவீரர் கொடிநாள்-2021 ஆம் ஆண்டு அதிக நிதி வசூல் செய்தமைக்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு வெள்ளி பதக்கம் என 90 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, பள்ளிக்கல்வித்துறை, கருவூல கணக்குத்துறை, வேளாண்மைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 230 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறந்த நகராட்சிக்கான விருது போடிநாயக்கனூர் நகராட்சிக்கும், சிறந்த ஊராட்சி ஒன்றியத்திற்கான விருது உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த பேரூராட்சிக்கான விருது பூதிப்புரம் பேரூராட்சிக்கும், சிறந்த தாலுகாவிற்கான விருது உத்தமபாளையம் தாலுகாவிற்கும், சிறந்த ஊராட்சிக்கான விருது சண்முகசுந்தரபுரம் ஊராட்சிக்கும், சிறந்த நிர்வாக திறமைக்கான விருது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். 

விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.6,840 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், வேளாண்மைத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.2.17 இலட்சம் மதிப்பிலான சுழல் கலப்பை மற்றும் காசோலையினையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில்  ரூ.63,240/- மதிப்பிலான களை எடுக்கும் கருவி 2 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு பசுமைக்குடில் மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்கும் பணிக்கு ரூ.18.88 இலட்சம் மதிப்பீட்டிலான ஆணையினையும், சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 2.12 இலட்சம் மதிப்பீலான காசோலையினையும், மகளிர் திட்டத்தின் மூலம் 17 பயனாளிகளுக்கு ஜவுளி வியாபாரம், மாடு வளர்ப்பு, பலசரக்கு கடை, தையல் கடை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழிலுக்கு ரூ.1.61 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 23 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2.07 கோடி கடனுதவியும் என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.


இதன் பின்னர் புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராயப்பன்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியகுளம், புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியகுளம், அப்துல்ரசாக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போடிநாயக்கனூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டிபட்டி,  பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி ஆண்டிபட்டி மற்றும்  தேனி-அல்லிநகரம், ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி ஆண்டிபட்டி, தேனி,  மற்றும் கோட்டூர் ஆகிய விடுதிகளை சேர்ந்த பள்ளி மாணவிகளின் சிலம்பாட்டம், தேனி மாவட்ட ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்களின் சீருடற் பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 650-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு கலெக்டர்  மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். 

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ப்ரீதா, துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி-அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், வருவாய் கோட்டாட்சியர்கள் பால்பாண்டி (உத்தமபாளையம்), முத்துமாதவன் (பெரியகுளம்)  உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments