பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்திற்கு நகராட்சி கவுன்சிலர் ஓ.சண்முகசுந்தரம் கண்டனம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 5.12.2023 நள்ளிரவில் மின் கசிவின் காரணமாக பிரசவ பண்டுவ அறையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் காரணமாக அங்கு சிகிச்சையில் இருந்த சுமார் 25 கர்ப்பிணி தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளுடன் அங்கிருந்து அவசரகதியில் வெளியேற்றப்பட்டு வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டதால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.
பணி மருத்துவர் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர் கங்காதேவி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, தீயை அணைக்கும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த செய்தியை வெளியில் தெரியாமலும் கண்டிப்பு செய்து மருத்துவமனை நிர்வாகம் உண்மையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் (நோயாளிகளின்) உயிரோடு விளையாடும் மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.
பொதுமக்களின் (நோயாளிகளின்) நலனை காக்க வேண்டிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகம், மருத்துவமனையில் முறையாக மின் பராமரிப்பு மற்றும் மின்சாதனங்களை கையாளாததன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் நிலையை கேள்வி குறியாக்கும் மருத்துவ மனை நிர்வாகத்திற்கு பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் ஓ. சண்முக சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற நிலை இனி வரவிடாமல் பார்த்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதோடு, காலையில் பணிபுரியும் மருத்துவர்களைப்போல் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாலையிலும் பணிபுரிந்து நோயாளிகளை காப்பாற்ற வேண்டும். அதுபோல மேல் சிகிச்சை என்ற பெயரில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை என்ற பெயரில் நோயாளிகளை அலைக்கழிப்பு செய்திட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாண்டியன், உதவி ஆசிரியர்.
Comments