தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.12.08 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவேற்றும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை புரிந்து கொள்வதற்கும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை எளிதில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த தரவுகள் பயன்படுத்தப்பட உள்ளது. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள Rights என்ற செயலியில் இந்த சமூக தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு கணக்கெடுப்பிற்கு வருகை தரும் பணியாளர்களுக்கு, தங்கள் தகவல்களை முழுமையாக தயக்கமின்றி வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் அரசின் மூலம் தொண்டு நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் காணப்படும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்களை மாநில அளவில், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாவட்டத்தின் சார்பாக அனுப்பி வைக்க முடியும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி இட ஒதுக்கீடு உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷஜீவனா பேசினார்.
இதனைத்தொடர்ந்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், கைகள் பாதிக்கப்பட்டவர்கள், அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள், ஸ்பாட்டிக் குழந்தைகள் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை மாவட்ட கலெக்டர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார்.
விழாவின் போது 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 லட்சம் மதிப்பிலான பேட்டரி சக்கர நாற்காலியும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ரூ.6,840 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளினையும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900 மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.08 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல முடநீக்கியல் தொழில் நுட்பவியலாளர் கார்த்திகேய பிரபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கெண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments