Skip to main content

தேனி மாவட்டத்தில் 4 நகராட்சி, 2 பேரூராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1,512 கோரிக்கை மனுக்கள்

தமிழ்நாட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு தீர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர், எஸ்.என்.ஆர். கல்லூரியில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் முகாம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள டி.சி.ஏ மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்கள்  பதிவு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முரளி, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாலமுருகன், நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், கவுன்சிலர்கள் பாலமுருகன், கிருஷ்ணபிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோன்று வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பி.எஸ்.ஏ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு சிவக்குமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சரவணன் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதுபோல கம்பம் நகராட்சி ஜெ.எஸ்.டி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் மனுக்கள் பதிவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.

இந்த முகாமில் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட  பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், மனுக்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் விரிவாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

“மக்களுடன் முதல்வர்“ என்ற திட்டம் அன்றாடம்  பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, அனைத்து நகர்ப்புற வார்டு அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி நகர்ப்புற பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு இணையதளத்தின் வயிலாக பதிவேற்றம் செய்து, அனைத்து மனுக்களுக்கும் 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து  தீர்வு காணும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேனி மாவட்டத்தில் 18.12.2023 முதல் 30.12.2023 வரை 10 நாட்கள் இம்முகாம் நடைபெறும். அதிகமாக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளுக்கு 2 நாட்களும், நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் வாரியாக இம்முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 


தேனி மாவட்டத்தில் 18.12.23 அன்று தேனி-அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 553 மனுக்கள் பெறப்பட்டது. பெரியகுளம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 213 மனுக்கள் பெறப்பட்டது. கம்பம் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 206 மனுக்கள் பெறப்பட்டது. போடிநாயக்கனூர் நகராட்சியில் நடைபெற்ற முகாமில் 158 மனுக்கள் பெறப்பட்டது. உத்தமபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் 238 மனுக்கள் பெறப்பட்டது. வீரபாண்டி பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் 144 மனுக்கள் என மொத்தம் 1,512 மனுக்கள் இன்று நடைபெற்ற  முகாம்களில்  பெறப்பட்டது.

சதிஷ், இணை ஆசிரியர்

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments