Skip to main content

தேனியில் சிறுதானிய உணவு திருவிழா: கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 14.12.2023 அன்று சிறுதானிய உணவுத் திருவிழா தேனி என்.ஆர்.டி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலை வகித்தார். 

இந்த உணவு விழாவானது ஐ.நா. சபையால் 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களாகிய நுகர்வோர்கள் இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவுத்திருவிழா நடத்த வேண்டும் என அறிவித்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உணவுத்திருவிழா நடைபெற்றது.

நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவும், உணவே மருந்து என்ற அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறையினை அமைத்து கொண்டதன் காரணமாகவும் 100 ஆண்டுகள் நோய் நொடியில்லாமல்  வாழ்ந்தனர். நவீன கால மாற்றம் காரணமாக நமது பாரம்பரிய உணவு பழக்கங்களை மறந்து துரித உணவுகளை அதிகமாக உட் கொண்டதன் விளைவாக,  புதிய, புதிய நோய்களும், பல்வேறு உடல் உபாதைகளும் தற்பொழுது ஏற்படுகிறது.  

இதனை தவிர்ப்பதற்காகவும், நமது பாரம்பரிய உணவு முறைகளை மீட்டெடுப்பதற்காகவும், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், பாரம்பரிய உணவுகளை வரும் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதற்காகவும் நமது உணவுப்பழக்கத்தினை மாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த சிறுதானிய உணவுத்திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்த உணவுத்திருவிழாவில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், உணவு பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவுத்துறை, சமூகநலத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் என பல்வேறு துறைகளின் கீழ்           50 அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுதானிய உணவுகளின் கண்காட்சி நடைபெற்றது.

இந்த உணவுத்திருவிழாவில் ராகி, சாமை, திணை, சோளம், வரகு போன்ற சிறுதானியங்களால் செய்யப்பட்ட லட்டு, குக்கீஸ், பனியாரம்,  பிஸ்கட்டு, முறுக்கு, அதிரசம், சீடை, தட்டை, கேக், சிறுதானிய ப்ரௌனி, இன்ஸ்டன்ட் தோசை மாவு, சாமை பிரியாணி, கஞ்சி, நவதானிய பாயாசம், புட்டு, கொழுக்கட்டை, மக்காச்சோளம் தோசை, அடை, இடியாப்பம், புட்டு, கேசரி, வடை, திணை பொங்கல், எள்ளுருண்டை, கேழ்வரகு பீசா, அல்வா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகளின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சிறுதானிய உணவுகளை வாங்கி உட்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலெட்சுமி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாதுரை, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்            ராஜேஸ்வரி, தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments