தேனியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6.11.2023 அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 221 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
கூட்டத்தின் போது பெரியகுளம் வட்டம், தென்கரையை சேர்ந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக நிவாரண உதவியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, மாணவன் குடும்பத்தார்க்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,900/- மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.1.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்.
மேலும், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்புஅங்காடியில் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி,தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) முரளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலஅலுவலர் இந்துமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments