Skip to main content

தேனியில் கூட்டுறவு வார விழா: 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி மாவட்டம், தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் 20.11.23 அன்று 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை                      அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 17,454 விவசாயிகளுக்கு ரூ.187.68 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2023-24) இதுவரை 10,675 விவசாயிகளுக்கு ரூ.126.51 கோடி பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்கள மூலம் பயிர்க்கடன், நகை ஈட்டின் பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல், கிட்டங்கி வசதி அளித்தல், தானிய ஈட்டின் பேரில் கடன், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு கடன் வழங்கல், டாப்செட்கோ, டாம்கோ திட்டங்களின் கீழ் கடன் வழங்கல், மத்திய கால கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்படவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற 2021-ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடி கடனும், 2022-ஆம் ஆண்டில் ரூ.12,000 கோடி கூட்டுறவு கடனும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.15,000 கோடி கூட்டுறவு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் சீரிய முறையில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்கள் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் மேம்பாட்டிற்காக அரும்பணி ஆற்றி வருகின்றன. எனவே, கூட்டுறவு சங்கங்கள் மக்களின் நிறை, குறைகளை கேட்டறிந்து, அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.  இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

அதுபோல விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 20-ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தான் கூட்டுறவு சங்கங்கள் முதன் முதலாக உருவாக்கப்பட்டு, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகளவிற்கு முன்னோட்டமாக திகழ்ந்து கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு இயக்கங்கள் முதன் முதலில் தமிழ்நாட்டில் 1904-ஆம் ஆண்டில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவள்ளுர் மாவட்டம் திரூரிலும், நுகர்வோர் கூட்டுறவு சங்கம் திருவல்லிக்கேணியிலும் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டு இதர மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன. 

தேனி மாவட்டத்தில் 119 கூட்டுறவு சங்ககங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு தரப்பு மக்களுக்கான தேவைகளை இச்சங்கங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக, கடன் மற்றும் பிற இடுப்பொருட்களை வழங்கி வேளாண் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், உறுப்பினர்களுக்கு கடன் வசதி அளிப்பதுடன் வேளாண் சந்தையை உருவாக்குவதிலும், பொது விநியோக திட்டம் உட்பட நுகர்வோர் தேவையை பூர்த்தி செய்வதிலும் அளப்பரிய பணிகளை செய்து வருகின்றன. இவ்வாறு கலெக்டர் ஷஜீவனா பேசினார்.

இந்த விழாவின் போது கூட்டுறவு சங்கங்கள் மூலம் 995 பேர்களுக்கு ரூ.11.8 கோடி மதிப்பிலான பயிர்க்கடனும், 198 பேர்களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடனும், 941 பேர்களுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், 23 பேர்களுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான மத்திய கால கடனும், 28 பேர்களுக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பிலான சிறுவணிக கடனும், மாற்றுத்திறனாளிகள் 5 பேர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனும், 7 மகளிருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோர் கடனும், 2 பேர்களுக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பிலான விவசாயம் அற்ற கடனும், 3 பேர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சிறு குறு தொழில் முனைவோர் கடனும், ஆதரவற்ற விதவை கடனாக ஒரு நபருக்கு ரூ.50,000-ம்,            12 பேர்களுக்கு சம்பள கடனாக ரூ.1.55 கோடியும் என மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

விழாவில் மாவட்ட வட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பெ.ராஜபாண்டியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ)  பொ.தனலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொ) இரா.மணிகண்டன், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) கா.சேகர், மதுரை டான்பெட் மண்டல மேலாளர் ச.பார்த்திபன், துணைப்பதிவாளர் (பால்வளம்) அ.இரணியன், மண்டல துணை இயக்குநர் (பால் கூட்டுறவுகளின் தணிக்கைத்துறை) க.பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் பா.ராஜேஷ்கண்ணன், ஆ.சரவணக்குமார், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் நா.ராஜாங்கம் உள்பட கூட்டுறவு சங்க செயலாளர், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments