தேனி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்ட அரங்கு: காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கினை 20.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.
இந்த கூட்டரங்கமானது 7790 சதுர அடி பரப்பளவில் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடத்தில் முக்கிய விருந்தினர்களுக்கென தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமையும் வகையிலும், ஒலி அமைப்பு மற்றும் காட்சி திரைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு சிறப்பு சாய்தள வசதிகளும், முதியோர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் அணுகும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வெங்கடேசன், தேனி-அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments