Skip to main content

திருச்சியில் தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் தி.மு.க மகளிர் அணி, திமுக மகளிர் தொண்டர், மகளிர் சமூக வலைத்தள அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 7.10.2023 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி., கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றனர். மேலும் மகளிரணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை உள்ளிட்ட மகளிர் அணி மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதோடு வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில், பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் கூட்டமாகவும் நடைபெற்றது. 


கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாக பங்கேற்றனர். அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி படத்திற்கு கனிமொழி எம்.பி., மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில், தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி WhatsApp குழுவில் இணைய பிரத்தியேக QR Code-யை அறிமுகம் செய்தனர்.

இந்நிகழ்வில், ஆதி திராவிடர் & பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, திருச்சி மேற்கு மாநகர திமுக செயலாளரும்,திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளர் அமலு எம்.எல்.ஏ., மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,இந்த மகளிர் கூட்டம் திருச்சியில் நடைபெறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, இத்தனை மகளிரும் இங்கு வந்திருப்பது, தமிழக முதல்வரின் கரத்தை வழுப்படுத்தவும், அவர் மகளிருக்கு அளித்த திட்டங்களும் தான் என்பதை இந்த கூட்டம் வெளிப்படுத்துகிறது. எனவே இந்த கூட்டத்தில் நம்மை வழிநடத்தி வருகின்ற திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், மகளிராகிய நீங்கள் தான் தி.மு.க-வின் பிரச்சார பீரங்கிகள், எந்த ஒரு ஆர்பாட்டம் இல்லாமல் முதல்வரின் சமையறைவரை ஒரு பிரச்சனையை கொண்டு செல்லும் அளவிற்கு பலம் வாய்ந்தவர்கள். முதல்வர் அறிவித்த கலைஞர் உரிமைத்தொகை, இலவச பேருந்து, பெண்களுக்கான கல்வி உதவித் தொகை, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் தான் இவ்வளவு பெரிய மகளிர் கூட்டம் கூடி இருக்கிறது. எனவே சென்னையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் திருச்சி மற்றும் தஞ்சையில் இருந்து காவிரி பாய்வது போல் மகளிர் அணியினர் பாய்வார்கள் என்று பேசினார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments