மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி.,
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியிலிருந்து அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது படகில், கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஆழ்கடலுக்கு விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணி கிறிஸ்டோபர், பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன், மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி ஆகிய 12 பேர் மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் மீன்பிடித்து விட்டு மாலத்தீவு கடல் பகுதி வழியாகக் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த மாலத்தீவு கடற்படையினர், அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி, மீனவர்கள் 12 பேரையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 27.10.2023 அன்று கனிமொழி எம்.பி., தனது சமூக வளைதள பக்கத்தில் “எனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட தருவைகுளத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது மாலத்தீவு கடலோர காவல்படையினாரால் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைந்து தலையிட்டு நமது மீனவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடி தருவைகுளத்தில், மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினரை 28.10.2023 அன்று தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார். அப்போது மாலத்தீவு சென்றுள்ள தமிழ்நாடு ஆழ்கடல் விசைப்படகு மீன்பிடி சங்கத் தலைவர் அந்தோணி ஜெயபாலனை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு 12 மீனவர்களின் தற்போது நிலைமையை கேட்டு அறிந்தார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments