தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், உடற் பயிற்சி கூடம் : கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார்
தூத்துக்குடியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 28.10.2023 அன்று மாநகராட்சிக்குட்பட்ட கிரேட் காட்டன், அசோக் நகர், லையன்ஸ் டவுண் புல்தோட்டம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த இறகு பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை கனிமொழி கருணாநிதி எம்.பி., திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனை தடுக்க அண்டை நாடுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ரிக்டா, மாநகர பொறியாளர் பாஸ்கர், துணை மாநகர பொறியாளர் சரவணன், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments