Skip to main content

தூத்துக்குடி தொகுதியில் பழுதடைந்த 20 காலனி வீடுகள் புதிய கான்கிரீட் வீடுகளாக மாற்றம்: கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்.


தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தத்தெடுத்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. சிதலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடு வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பி.,-யின் முயற்சியால், NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited, Chennai. (என்டிடி குளோபல் டேட்டா மையங்கள் & கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை) தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.80 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்து, புது வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளை ஏற்பாடு செய்தார்.  கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவு பெற்ற 9 வீடுகளை கனிமொழி கருணாநிதி எம்.பி. 24.10.2023 அன்று திறந்து வைத்தார். 

இதனை அடுத்து நடைபெற்ற நிகழ்வில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தங்களுடைய CRS நிதியை இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்காக ஒதுக்கி தந்து உதவி செய்த NTT Global Data Centers & Cloud Infrastructure India Private Limited அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் Daya Constructions அவர்கள் இந்த வீடுகளை கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வீடு எப்படி இருக்கிறது என்று கேட்டால் அனைத்தும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். வீட்டுக்கு உள்ள போய் பார்த்தால் எங்களுக்கும் சந்தோசமா இருக்க கூடிய அளவுக்கு அழகாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிலையம் திறக்க வந்த நிகழ்ச்சியின் போது. இங்கு உள்ள வீடுகள் மிகவும் பழுதடைந்து இருக்கிறது, நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று அழைத்தனர். அப்போது வீடுகளை பார்த்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நானும், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பல முயற்சிகளை செய்து பார்த்தோம். ஆனால் கட்டி முடித்த வீட்டிற்கு, சரி செய்து தர எந்த திட்டமும் கிடையாது. அதனால் ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசி, அவர்களுடைய CRS தொகை மூலம் வீடுகளை கட்டி முடிக்க முடிவு செய்தோம். தனியார் நிறுவனத்திடம் பேசி, பண உதவி பெற்று, Daya Constructions மூலம் வீடுகளை கட்டி முடித்துவிட்டோம். தற்போது பணிகள் நிறைவு பெற்ற 9 வீடுகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்திருக்கிறோம். 

இன்னும் 11 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் இன்று தொடங்கி விட்டது. விரைவில் அதுவும் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பல திட்டங்களை தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது. அதில், மிகவும் முக்கியமான திட்டம். அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள், கல்லூரி போகக்கூடிய கால கட்டத்தில் எவ்வளவு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோர்களோ, அது வரைக்கும் படித்து முடித்து, வேலைக்கு போகிற வரைக்கும், உங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதற்கு, 'புதுமைப் பெண் திட்டம்'. அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும், உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை படிக்க வையுங்கள், உயர் கல்விக்கு அனுப்புங்கள் அது மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கும் தன்னம்பிக்கை உடன் வாழ்வதற்கும் மிகப் பெரிய அளவில் உதவி செய்யும். அவர்களை சொந்த காலில் நிற்க வைப்பது கல்வி தான். அதை தான் தலைவர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று பெண்களுக்கான திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம். அரசாங்கம் பல திட்டங்களை கொண்டு வருகிறது, அதை பயன்படுத்தி கொள்வது நமது கையில் தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.


கடந்த 2022 ஏப்ரல் மாதம் பஞ்சாயத்துராஜ் திட்டத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி. அந்தக் கிராமத்தை தத்தெடுத்து, முன்மாதிரி கிராமமாக மாற்றும் நோக்கில் தத்தெடுப்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments