தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெலுங்கான மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் குடிமை பொருட்கள் வரவழைப்பு: பொருட்களை கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதை அமைத்த பிறகு முதன் முறையாக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தெலுங்கான மாநிலத்திலிருந்து குடிமை பொருட்கள் ரயிலில் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 22.10.2023 அன்று தொடங்கி வைத்தார். தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு ரேசன் பொருட்கள் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டத்தில் அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு 8,000 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான ஒதுக்கீடு தெலுங்கானா மாநிலம் வாராங்கால் மாவட்டம் சுங்கன்பாத் இரயில் நிலையத்திலிருந்து 21 பெட்டிகளில் 1,326 டன் அரிசி 26,436 மூட்டைகள் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தேனி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
12 ஆண்டுகளுக்கு பின்பு ரயில் மூலம் தேனி மாவட்டத்திற்கு குடிமை பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிமை பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், போடிநாயக்கனூர், தேனி ஆகிய 5 நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்கள். லாரிகளில் குடிமை பொருட்களை ஏற்றும் பணிகளில் 120-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக பொதுமேலாளர் (போக்குவரத்து) ஹரிகுமார், தென்னக ரயில்வே துணை வணிக மேலாளர் மணிவண்ணன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் வி.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments