தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட மஞ்சளாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 15.10.2023 அன்று திறந்து வைத்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து, தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் என மொத்தம் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 3,386 ஏக்கர் நிலங்களுக்கு அக்டோபர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வினாடிக்கு 60 கனஅடி வீதமும், டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 31-ம்தேதி வரை 50 கனஅடி வீதமும், பிப்ரவரி 1- ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை 45 கனஅடி வீதம், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 1,873 ஏக்கர் நிலங்களுக்கு அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை வினாடிக்கு 40 கனஅடி வீதமும், டிசம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம்தேதி வரை 30 கனஅடி வீதமும், மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை 20 கனஅடி வீதம், தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இன்று 15.10.2023 முதல் 15.3.2024 தேதி வரை 153 நாட்களுக்கு 1,119.73 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பை பொருத்து இதே போல் தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 3,148 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணவாய்பட்டி, பரசுராமபுரம், கட்டகாமன்பட்டி, வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, குன்னுவராயன்கோட்டை, சிவஞானபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 2,111 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் தங்கவேல் (பெரியகுளம்), சக்கரவர்த்தி (தேனி), நீர்வளத்துறை (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) செயற் பொறியாளர் வி.சுகுமார், உதவி செயற்பொறியாளர் கே.சௌந்தர், உதவி பொறியாளர்கள் தளபதிராம்குமார், மோகன்தாஸ், கமலகண்ணன், பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜீனன், தமிழ்நாடு அரசு மீன்வர் நலவாரிய உறுப்பினர் குள்ளபுரம் முருகன், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments