Skip to main content

சென்னையில் தி.மு.க மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சர், அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்பு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் 'மகளிர் உரிமை மாநாடு' சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தி.மு.க தலைவரும்,தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., முன்னிலை வகித்தார். தி.மு.க மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் அகில இந்திய பெண் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி கருணாநிதியும் மேடையில் நினைவு பரிசு வழங்கினார்கள். 




இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், அமைச்சருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளருமான ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், டெல்லி சட்டப்பேரவை துணை தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் உள்பட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மாநாட்டில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசுகையில், கலைஞரின் *உடன்பிறப்பே* வார்த்தையின் அர்த்தத்தை கூற பேச்சை தொடங்கிய கனிமொழி சகோதரர்களே சகோதரிகளே என்று அழைக்காமல், அனைவரையும் சமமாக உடன்பிறப்பே என்று கலைஞர் அழைத்ததை நினைவுக்கூர்ந்து உரையை தொடங்கினார்.  "ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் ஆயிரம் மெழுகுவர்த்தியை ஏற்றி முடியும் அதுபோல அறிவொளி பெற்ற பெண்ணால் சமூகத்தை மாற்ற முடியும்" என்று கலைஞர் கூறினார். பெரியாரின் மகளிர் மாநாட்டில் ஏற்கப்பட்ட கொள்கைகள் கலைஞரின் ஆட்சியில் திட்டங்களாக மாறி சமூகத்தை ஏற்றம் பெற செய்தன. இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறையில் பெண்களை இணைத்து ஆண்களுக்கு பெண்களை காவல் அளிக்க வைத்தார். கலைஞரின் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஆட்சியின் முதல் நாளில் பெண்களுக்கான இலவச விடியல் பயணத்தை தொடங்கினார்.படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினார். வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தும் சும்மா தான் இருக்கிறார்கள் என்ற பெண்களின் உழைப்பை மதித்து உரிமைத்தொகையை வழங்கியவர். நாரி சக்தி (பெண்கள் சக்தி) யை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று மோடி அவர்கள் பொய் கூறிவருகின்றனர். என்றைக்கும் நடைமுறைக்கே வராத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மோடி அரசு பெருமை பேசுகிறது. மணிப்பூர் பெண்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. நாட்டின் முதல் குடிமகளான குடியரசு தலைவரையே கோயிலுக்கு அனுமதிக்கவில்லை,  நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. பாண்டிச்சேரியில் தலித் அமைச்சர் பதவியை விலகும் நிலை உள்ளது. மோடி அரசில் குடியரசுத்தலைவர், அமைச்சர் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சாதாரண பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு கல்வி இல்லை- பாதுகாப்பு இல்லை- எதிர்காலம் இல்லை-பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள். பெண்கள் யாசகம் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். இவ்வாறு கனிமொழி எம்.பி., பேசினார்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments