Skip to main content

தேனியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 11.10.2023 அன்று நடைபெற்றது. 

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர செட், பெட்டிகள், போர்டுகள் போன்றவற்றை அகற்றி கொண்டனர். இருப்பினும் கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. 


மேலும் சாலையின் அளவுகள் எவ்வளவு என்று வரைபடத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு சாலையின் அளவு குறைவாக இருக்கும் கட்டிடங்கள் முன்பு எத்தனை மீட்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அளவீடு செய்யப்பட்டு பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டு  சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பு அளவு குறித்து அறிவுத்தப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதிஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். அதுபோல ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 



Comments