தேனி மாவட்டம், கோட்டூர் பகுதியில் புதிய நவீன ஆவின் பாலகத்தை திறந்து வைத்து, பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
தேனி மாவட்டம், கோட்டூர் ஊராட்சி பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் திறந்து வைத்து, தேனி ஒன்றிய பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்து 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, பால் வளம், பால் பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் நிர்வாக இயக்குநர் எஸ்.வினித் ஆகியோர் முன்னிலையில் 7.10.2023 அன்று துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் கோட்டூர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன பாலகத்தில் தேவையான குளிரூட்டும் கருவிகள், பன்னீர் தயாரிக்கும் இயந்திரம், பாதாம் பொடி தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களும், ஆவின் நெய், வெண்நெய், பால்கோவா, ஐஸ்கிரிம், நறுமண பால், தயிர், மோர், மற்றும் பால்பவுடர் போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பாலகத்தின் விற்பனையை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விற்பனை வளாக பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆவின் பொருட்கள் தயார் செய்யும் அறையினை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து தேனி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, இந்நிலையத்திலிருந்து சுமார் 1.00 இலட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையத்திற்கு மாவட்டத்திலுள்ள 444 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாள் ஒன்றிற்கு 50,000 லிட்டர் கொள்முதல் செய்து குளிரூட்டப்பட்டு, மதுரை மற்றும் பிற மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு பால் வாகனங்கள் மூலம் தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை அடுத்து ஆய்வு கூட்டத்தில் தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., வாயிலாக, மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் அளவு குறித்தும், மாவட்டத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் பால் கொள்முதலின் அளவு, பால் குளிரூட்டும் மையங்களின் எண்ணிக்கை, பால்பண்ணை மற்றும் மொத்த குளிரூட்டும் மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக உள்ள வழித்தடங்களின் விவரம், குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாட்டு கடன் திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், கால்நடை தீவனம், நுண்தாது உப்பு கலவை, நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடம், அண்ணா நலநிதி திட்டம், கால்நடை காப்பீட்டு திட்டம், பால் பகுப்பாய்வு கருவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கம், ஒன்றிய பயிற்சி நிலையம், வெளிமாநில பால் பண்ணை சுற்றுப்பயண மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்களின் வாயிலாக பயன் பெற்றவர்களின் விவரம் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
1.பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை சார்பில், ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு பால் கறவை மாட்டுக் கடன் உதவிகளும்,
2. ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு கறவை மாடு பராமரிப்பு கடன் உதவிகளும்,
3. ரூ.19.54 லட்சம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தாட்கோ மூலம் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும்,
4. 5 பயனாளிகளுக்கு ரூ.35,250 மதிப்பிலான தீவன விதைகளுக்கான கடன் உதவிகளும்,
5. 218 பயனாளிகளுக்கு ரூ.96.56 லட்சம் மதிப்பீட்டில் பால் தர பரிசோதனை கருவிகளும்,
6.சிறுபால் பண்ணை அமைப்பதற்காக ஒரு குழுவிற்கு ரூ.66 லட்சம் கடன் உதவிகளும்,
7. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,
8. மகளிர் திட்டத்தின் மூலம் 3 குழுக்களுக்கு ரூ.24.50 லட்சம் கடனுதவிகளும்,
9. கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் மாட்டுக்கடனாக 71 பயனாளிகளுக்கு ரூ.42.86 லட்சம் கடனுதவிகளும் என மொத்தம் 377 பயனாளிகளுக்கு ரூ.3.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், துறை சார்ந்த அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை மாவட்டந்தோறும் சென்று களஆய்வு மேற்கொண்டு, தங்கள் துறையின் செயல்பாடுகளை முழுமையாக கண்காணித்து, தேவையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேனி மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகப்படியான பால் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நெய் மற்றும் இனிப்பு வகைகள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பால் உற்பத்தியை பெருக்கும் விதமாக பால் விற்பனையாளர்களில் முறையாக ஆவின் நிறுவனத்திற்கு அதிக அளவில் வழங்குவோர்களுக்கு லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விவசாயிகள் மற்றும் ஆவின் நிறுவனத்திற்கிடையே நல் உறவை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்களும், கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, துணை பால்வள ஆணையர் ரா.லட்சுமணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தேனி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு தேனி ஒன்றிய பொது மேலாளர் மரு.க.வாணீஸ்வரி, துணை பதிவாளர் (பால்வளம்) அ.இரணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments