தேனியில் 156 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம்
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் 29.9.23 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாதந்தோறும் கடனுதவிகளை வழங்கிடவும், சுய உதவி குழுக்களை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்குவதற்காக சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கூட்டுறவுத்துறை, மத்திய கூட்டுறவு வங்கி, முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் இணைந்து மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் மாதாந்திர முகாம் 29.9.23 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, பெண்களின் கூட்டு முயற்சியில் இலாபம் தரக்கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் அப்பெண்களின் குடும்ப வருமானத்தையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும், வறுமையில் இருந்து விடுபட செய்வதற்காகவும் மகளிர் திட்டத்தின் மூலம் சுழல் நிதி கடன், பொருளாதார கடன், தொழிற் கடன், வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு கடனுதவிகள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனுதவிகளை பெண்கள் பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.29.9.23 அன்று நடந்த மாதாந்திர கடனுதவி வழங்கும் முகாமில் 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15.26 கோடி வங்கி கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயிற்சி பெற்ற 35 மாணவிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர் மதுமதி, துணை கலெக்டர் (பயிற்சி) முகமது பைசல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments