தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் கிராம ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள். காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம். 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளது.
மேலும் 130 கிராம ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபை கூட்டத்தை மிக சிறப்பாக நடத்திட, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments