மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் விவசாய நிலங்களுக்கு விலையில்லாமல் மண் எடுக்க அனுமதி: கனிமொழி கருணாநிதி எம்.பி.-க்கு விவசாயிகள் நன்றி
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குருகாட்டூர் ஊராட்சியில், தி.மு.க துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் 13.9.2023 அன்று 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகள் கனிமொழி எம்.பி.-யிடம், கடம்பாகுளம் தூர்வாருவதற்கும், கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கடம்பாகுளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு டிராக்டர் மூலம் விலையில்லாமல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த பணிகளை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் 27.9.2023 அன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் மனு அளித்த உடனேயே நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
சதிஷ், இணை ஆசிரியர்
Comments