தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தென்றல் தவழும் சுருளிதீர்த்தம் பகுதியில் சாரல் திருவிழா மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் 27.9.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழா 27.9.2023 முதல் 2.10.2023 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,நமது மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை பொதுமக்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இயற்கையோடு ஒன்றி இருப்பதற்காக சுருளி சாரல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா தளங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை, வனத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, நீர்வளத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு மழையின் அளவு 32 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த விழாவில், பொது மக்களிடையே சிறுதானிய உணவு வகைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் கண்காட்சி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் மலிவு விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் குழந்தைகளை கவரும் வகையில் சத்தான உணவு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளை உற்சாக படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கோலப்போட்டி, நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.
மேலும், சாரல் விழா நடைபெறும் 6 நாட்களும் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஷஜீவனா பேசினார். இதனைத்தொடர்ந்து கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.முன்னதாக, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு தூய்மைப்பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் வன சரக புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, சுற்றுலா அலுவலர் (பொ) பாஸ்கரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments