தேனியில் உடல் உறுப்பு தானம் செய்த வருவாய் ஆய்வாளர் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளாராக பணிபுரிந்து வந்த வடிவேல் அவர்கள் கடந்த 23.9.2023 அன்று பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் சீலையம்பட்டி, சப்பாணி அம்மன் கோயில் என்ற இடத்தில் டூவிலரில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 24.9.2023 அன்று சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த வடிவேல் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அன்னாரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தார்கள். அதன்படி 26.9.23 அன்று அன்னாரின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், கண்கருவிழி, தோல் ஆகியவை மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராஜாஜி மருத்துவனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வடிவேல் அவர்களின் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 26.9.2023 அன்று சின்னமனூர் பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டிற்கு நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
இதன்பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த வடிவேல் அவர்கள் 43 வயது நிரம்பியவர். கடந்த 23.9.2023 அன்று பணி முடிந்து சின்னமனூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பும் வழியில் சீலையம்பட்டி கிராமத்தில், சப்பாணி அம்மன் கோயில் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக எதிரில் வந்த மாடு முட்டியதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமுற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 24.9.2023 அன்று சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூளைச்சாவு அடைந்த வடிவேல் அவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக தருவதற்கு அவரின் மனைவி, தாய், சகோதரி மற்றும் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டு மருத்துவ நிர்வாகத்திடம் தெரிவித்தார்கள். அதன்படி, இன்று அன்னாரின் உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், கண்கருவிழி, தோல் போன்ற பல்வேறு உடல் உறுப்புகளை கொடையாக தந்துள்ளார்கள். அந்த உடல் உறுப்புகள் அனைத்தும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராஜாஜி அரசு மருத்துவனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்தவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 23.9.2023 அன்று உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அவர்களுடைய தியாகத்தை மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவித்தார்கள். 23.09.2023-க்கு பின்னர் உடல் உறுப்புகளை தானம் செய்வபர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது கோட்டாட்சியர் அளவிலான அலுவலர்கள் அரசின் சார்பில் மரியாதை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெருமதிப்பிற்குரிய வடிவேல் அவர்கள் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை கொடையாக தந்த அவரின் மனைவி, தாயார், சகோதரி ஆகியோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வடிவேல் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (பெரியகுளம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) ரவிச்சந்திரன், உத்தமபாளையம் வட்டாட்சியர் சந்திரசேகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments