கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனடைந்த தேனி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
“மங்கயராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா“ என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவர் இன்று இருந்திருந்தால் “மங்கையராய் தமிழ்நாட்டில் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றே சொல்லியிருப்பார். அந்த அளவிற்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த உலகில் தாய், மனைவி, சகோதரி, தோழி, மகள் என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான். ஒருவர் பிறந்த நாடு கூட, தாய் நாடு என்றுஷதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயரில் தான் விளங்குகிறது. பெண்களும் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறார்.சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும்பத்தை சரியான முறையில் நிர்வாகம் செய்ய, சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ பெண் கல்வி அவசியமான ஒன்றாகும். ஒரு பெண் கல்வி கற்றவராக இருப்பின் பிரச்சனைகளை அறிதல், ஆராய்தல், தீர்வு காணல், மாற்று வழிகளை கண்டறிதல், நேரத்தை திட்டமிடுதல் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்திட முடியும். ஒரு பெண் கல்வி கற்றவராக இருந்தால் அந்த குடும்பம் தலைசிறந்து விளங்கும்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் கல்வி கற்பதிலிருந்தே அவர்கள் வேலைக்கு செல்லும் வரை அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறார்கள். மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் (மாதம் ரூ.1000/-), டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என இது போன்ற பல்வேறு திட்டங்களை பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.9.2023 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சம் மகளிர் பயன்படக்கூடிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 517 நியாய விலை கடைகளில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் விடுபட்ட மற்றும் குறித்த நாளில் முகாமிற்கு வர இயலாத பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்ட முகாமில் 1,49,188 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்ட முகாமில் 1,33,646 விண்ணப்பங்களும், சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்களும் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. தமிழ்நாடு ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், மாவட்ட கலெக்டர் ஆர்.வீ.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை துவக்க விழாவில் முதற்கட்டமாக 2,015 பயனாளிகளுக்கு வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கி திட்டத்தினை துவங்கி வைத்தார்கள். விண்ணப்பங்களின் நிலையை அறிய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 8 உதவி மையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
இத்திட்டத்தில் பயனடைந்த தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த நாகஜோதி தனுஷ்கோடி என்பவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிவித்தார்கள். அதனை செயல்படுத்தி மகளிர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றத்கு வழி வகையை ஏற்படுத்தியுள்ளார்கள். மகளிருக்கான உதவித்தொகை அல்ல, இது உரிமைத்தொகை என அறிவித்துள்ளார்கள். நான் கூலி வேலைக்கு சென்று எனது குடும்ப தேவையை பூர்த்தி செய்து வந்தேன். இந்நிலையில் உழைக்கும் மகளிர்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிடைத்த பணம். குடும்பத்திற்கு அன்றாட தேவையான காய்கறி, பால் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பயனுள்ளதாக உள்ளது. குடும்பத்தின் அவசர பணத்தேவைகளுக்கு பிறரிடம் நாடும் போது கொடுக்க தயங்குவார்கள். தற்போது கலைஞரின் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பணம் கிடைப்பதனால் அவசரத் தேவைக்கு பணம் வழங்க முன்வருகின்றனர். எங்கள் மீதான மதிப்பீட்டை இந்த உதவித்தொகை மாற்றியமைத்துள்ளது. இந்த திட்டத்தினால் எங்களை போன்ற பொருளாதார நிலையில் நலிவுற்ற நிலையில் உள்ள ஏழை, எளிய குடும்ப பெண்கள் மிகவும் பயனடைவார்கள். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொகுப்பு :
இரா.நல்லதம்பி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
தேனி மாவட்டம்
ம.ச.மகாகிருஷ்ணன்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்( செய்தி)
தேனி மாவட்டம்.
Comments