தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி., முன்னெடுப்பில் 59 ஊராட்சிகளில் 'மக்கள் களம்' குறை கேட்டல் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் 59 ஊராட்சிகளில் 'மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை கனிமொழி எம்.பி.- யிடம் வழங்கி உள்ளனர். இந்த மக்கள் களம் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, பெண்களுக்கு தையல் இயந்திரம், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்.பி., உத்தரவிட்டு வருகிறார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர், மின்சார வாரியத்துறையினர் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சியின் போது மனுக்களை பெற்று சிறிது நேரம் மக்களுடன் கனிமொழி எம்.பி., உரையாடி, சில கோரிக்கை மனுக்களுக்கு அங்கே இருக்கும் அதிகாரிகளை அழைத்து, இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவாதித்து உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டு வருகிறார்.
இதுகுறித்து எம்.பி., கூறுகையில், மக்கள் களம் என்ற மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச்சை, குடிநீர் பிரச்சனை, பேருந்து வசதி, மின் இணைப்பு, பட்டா பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் களம் நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நம்புகின்றனர். மக்கள் களம் நிகழ்ச்சியின் நோக்கமே, கிராமங்களில் வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று மனுக்கள் அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால், நாங்கள் மக்களை தேடி, அவர்களின் ஊராட்சிகளுக்கு சென்று, கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக கனிமொழி கருணாநிதி எம்.பி., கூறினார்.
சதிஷ், இணை ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments