தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டுவிழா மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 23.9.2023 அன்று நடைபெற்றது.உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணம் இல்லாமல் ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 23.7.2009 ஆண்டு தொடங்கப்பட்டது.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒன்றிணைந்து 2018-ஆம் ஆண்டு முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1.40 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் வரை கட்டணமில்லாமல் தரமான சிகிச்சைகள் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 5 பயனாளிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவபடுத்தியும், 15 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கியும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய 2 அரசு மருத்துவமனை மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கும் சிறப்பாக பணியாற்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.ரமேஷ்பாபு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை காப்பீடு திட்ட பொறுப்பு அலுவலர் மரு.ராமசுப்பிரமணியன், பெரியகுளம் தலைமை மருத்துவமனை மருத்துவர் குமார், மாவட்ட திட்ட அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், செல்லமணி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments