தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் முன்னிலையில் கருவேல்நாயக்கன்பட்டியில் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் சுத்திகரிப்பு நிலையம், குன்னூரில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, வைகை அணை அருகிலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, சோத்துப்பாறை அருகில் வாய்க்கால் பாலம் சீரமைப்பு பணி, பெரியகுளம் தலைமை மருத்துவமனை, லட்சுமிபுரம் மாவட்ட தலைமை நீதிமன்றம் முன்பு உள்ள நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து குழு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் அவர்கள் (கடலூர்), ப.கார்த்திகேயன் அவர்கள் (வேலூர்), மு.பாபு அவர்கள் (செய்யூர்), கே.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்), வை.முத்துராஜா அவர்கள் (புதுக்கோட்டை) மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் 31.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.அப்போது பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஆய்வில் தேனி-அல்லிநகரம் நகராட்சிகுட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த சுத்திகரிப்பு நிலையமானது 12.05 எம்.எல்.டி சுத்திகரிப்பு திறன் கொண்டது. நாள் ஒன்றிற்கு சுமார் 8 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தாமரைக்குளத்தில் விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா எனவும் பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து குன்னூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் மொத்த எண்ணிக்கை, வகுப்பறைகள், சத்துணவுக்கூடம், நூலகம், கணினி அறை, உடற் கல்வி கூடம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், மாணவர்களின் கல்வியின் தரம், தேர்ச்சி சதவீதம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் இப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு மையத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து வைகை அணை அருகில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையில், கரும்பு உற்பத்தி மற்றும் அரவை இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கரும்புகளின் கொள்முதல் விலை, பணியாளர்களின் எண்ணிக்கை, வேலை நேரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ஏற்றுமதி குறித்து சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இதன்பின்னர் பெரியகுளம் சோத்துப்பாறை அணை அருகில் விவசாய பொதுமக்கள் பிரதான வாய்க்கால் பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வாய்க்கால் பாலத்தினை மறுசீரமைத்து கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கென ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் 7,500 சதுரடி பரப்பளவில் தரைத்தளம், 7,338 சதுரடி பரப்பளவில் முதல்தளம், 5,993 சதுரடி பரப்பளவில் இரண்டாவது தளம் என மூன்று தளங்களாக மொத்தம் 20,831 சதுரடி பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை மனுக்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து லட்சுமிபுரம் மாவட்ட தலைமை நீதிமன்றம் அருகில் நவீன முறையில் பயணியற் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மனுக்கள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது தேனி-அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன், இணை இயக்குநர் (மருத்துவம்) ரமேஷ்பாபு, முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மனுதாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பிற்பகலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மனுக்கள் கொடுத்த பொதுமக்களிடம் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments