Skip to main content

தேனியில் மாவட்ட அளவிலான உணவு தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் : சிப்காட் நிர்வாக இயக்குநர் பி.ஆகாஷ் பங்கேற்பு

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில்  சிப்காட் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான  உணவு  தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர்        ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் சிப்காட் நிர்வாக இயக்குநர் பி.ஆகாஷ்  முன்னிலையில் 29.8.2023 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்,ட கலெக்டர் பேசுகையில், தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  பெரும்பாலான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கேரள மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகளை  மேம்படுத்தி தேனி மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்டத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தேனி வட்டத்திற்குட்பட்ட  தேனியிலிருந்து கம்பம் செல்லும் பிரதான சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உப்பார்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் தப்புகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 424.10 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உணவு பூங்காவிற்கென 123.49 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடிப்படை தேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுவான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு 300.61  ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவுப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பிளாட்டுகள் அனைத்தும் குத்தகை அடிப்படையில் 99 ஆண்டிற்கு சிப்காட் மூலம் பதிவு செய்து வழங்கப்படும். அதிகமாக உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் இருக்கும் இடத்திலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்தும் பொழுது இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் சிப்காட் உணவு தொழில் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனை முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் பேசினார். 

இதேபோன்று கூட்டத்தில் சிப்காட் நிர்வாக இயக்குநர்  பி.ஆகாஷ் பேசுகையில், தேனி சிப்காட் உணவு பூங்காவில் உணவு சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு 123.49 ஏக்கர் பரப்பளவில் 55 பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஒரு ஏக்கர் 46 லட்சம் 50 சதவீதம் மானியத்துடன் 99 வருடத்திற்கு குத்தகையாக விடப்படும். தமிழ்நாடு அரசு தொழில் அதிபர்களை ஊக்குவிக்கவும், தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகளை பெருக்குகின்ற உயரிய நோக்கத்துடனும் 50 சதவீதம் மானியமாக ரூ 23 லட்சத்தில் வழங்குகிறது. அடிப்படை வசதியாக சாலை, தெரு விளக்கு மழைநீர் கால்வாய்கள், கழிப்பிட வசதிகள் மற்றும் 24 மணிநேரமும் தேவைப்படும் அளவு தண்ணீர் மற்றும் மின்சாரம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. உணவு சார்ந்த பொருட்களை இருப்பு வைப்பதற்கு 6,011 சதுரமீட்டர் பரப்பளவில் குடோன், 6,011 சதுரமீட்டர் பரப்பளவில் குளிர்சாதன கிடங்கு, 5,475 சதுரமீட்டர் பரப்பளவில் பழங்களை பழுக்க வைக்கும் கூடங்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தை 500 சதுர மீட்டர் பரப்பிலும் மற்றும் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள் தொழில் செய்வதற்கு 282 சதுர மீட்டர் பரப்பளவில் தொழிற் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது. தேவையான அனைத்து வசதிளையும் இந்த உணவு பூங்கா ஈர்த்து, அதிக உணவு தொழிற்சாலைகளை பெருக்கி ஏராளமானோர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற நோக்குடனும், உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உணவு தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் பிற பொதுவான தொழிற்சாலைகள் அமைப்பதற்கு சிப்காட் பகுதியில் 95 பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.49 லட்சம்  50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் தாங்கள் உருவாக்கவுள்ள உணவு தொழிற்சாலையினை சரியான முறையில் திட்டமிட்டு, பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று  தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். தொழில் தொடங்குவதற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் சிப்காட் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும். சிப்காட் பூங்காவில் அனைத்துவிதமான விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு வழிகாட்டுதல்  வழங்கி,  சிப்காட் ஒதுக்கீடு குழு (Allotment Commity) மூலம் விண்ணப்பங்களை  பரிசீலனை செய்து காணொளி காட்சி வாயிலாக விண்ணப்பதாரர்களை நேர்முக தேர்வு செய்து விண்ணப்பங்களுக்கான அனுமதி வழங்கப்படும். இந்த வாய்ப்பினை தொழில் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு தேவையான இடங்களை சிப்காட் பகுதியில் தேர்வு செய்து, உணவு தொழிற்சாலை தொடங்குவற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழிகாட்டுதல்களும்  சிப்காட் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும் என சிப்காட் நிர்வாக இயக்குனர் பேசினார்.முன்னதாக மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் (PMFME) திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ,1.10 கோடி தொழில் கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் சிப்காட் நிர்வாக இயக்குநர் பி.ஆகாஷ் முன்னிலையில் வழங்கினார். இந்த கூட்டத்தில் பொதுமேலாளர் (சிப்காட்) ஷீலா, முதன்மை செயல் அலுவலர் (TNAPEx) அழகுசுந்தரம், திட்ட அலுவலர் (சிப்காட்) ஜெயராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், TIIC மேலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments