தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரை, வடுகபட்டி தேவதானப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 26.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் தென்கரை பேரூராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹவுசிங் போர்டு காலனியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளையும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகளையும், கைலாசப்பட்டி 12-வது வார்டு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது கழிப்பறை கட்டுமான பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் காலனியில் ரூ.11.75 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்தல் பணிகளையும் பாரதி நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளையும் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதேபோன்று வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் பொது நூலகம் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டதையும், பெரியகடை வீதியில் 0.980 கி.மீ தூரத்திற்கு ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் மஞ்சளாறு சாலை பகுதியில் ரூ.240 லட்சம் மதிப்பீட்டில் 0.025 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நாடக மேடை அமைக்கும் பணிகளையும் மற்றும் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார்.
__01.jpg)
இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர் நிர்வாகம் (பொறுப்பு) சுப்பிரமணியன் செயல் அலுவலர்கள் மோகன்குமார் (தென்கரை) விஜயா (தேவதானப்பட்டி), சுரேஷ் (வடுகபட்டி) உள்பட பலர் உடனிருந்தனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments