தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர் மற்றும் கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 23.8.2023 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.301.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், அரண்மனைப்புதூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும்,
15-வது நிதிக்குழு மானியம் (2022-23) திட்டத்தின் கீழ் ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், கோட்டைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகளையும், ரூ.3.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் கழிப்பறை கட்டிடத்தினையும் ரூ.5.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆசிரியர்கள் கழிப்பறை கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோட்டைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோன்று கொடுவிலார்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் நீர் செறிவூட்டு குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments