தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரியில் 23.8.2023 (புதன்கிழமை) அன்று பி.எட்., மாணவிகளுக்கு பிரைட் பிகினிங் - 2023 விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்புரை வழங்கினார். விழாவில் பொருளறிவியல் துறை உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, சிறப்பு விருந்தினர் பெரியகுளம் டி.எஸ்.பி., கீதா திருவாசகம் அவர்களை அறிமுகம் செய்தார். விழாவில் டி.எஸ்.பி., கீதா திருவாசகம் பேசுகையில், வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் தனித்துவமானது. அதை தெரிந்து செய்தால் வெற்றி என்பது நிச்சயம். எதையும் ஆர்வத்துடன் படித்தால் யாரும் அதை தூண்ட வேண்டும் என்ற அவசியம் இருக்காது. உங்களுக்குள் திறமைகள் இருக்கிறது அதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி என்பது நிச்சயம். ஆசிரிய மாணவிகளாகிய நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் கற்பனை செய்து பின்பு முயற்சித்து வேலை செய்தால் ஒரு சிறந்த ஆசிரியராக முடியும் என்றும், கல்வி என்பது காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு அதை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்களாகிய நீங்கள் தெரிந்து செயல்படவேண்டும் என்றும் பெண்களாகிய நீங்கள் படித்து வேலைக்கு செல்ல வேண்டும். நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் வெற்றிக்கு விடாமுயற்சியே முதல்படி என்று பேசினார். விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், கௌரவ விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றினார். நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி செயலாளர் குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் போது பி.எட்., இரண்டாமாண்டு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பொருளறிவியல் துறை உதவி பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments