தேனியில் தே.மு.தி.க சார்பில் வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம்: நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்
தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாயி, மாவட்ட பொருளாளர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "கேப்டன் எப்படி இருக்கிறார் என்று நான் போகும் இடமெல்லாம் என்னிடம் கேட்கிறார்கள். கேப்டன் நல்லா இருக்கிறார். நம்மோடு 100 ஆண்டு காலம் இருந்து நம்மளை வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, வீழ்ந்ததாக இருக்கக் கூடாது. கேப்டன் போல் நல்லவர்கள் வாழ வேண்டும். அதை பார்த்து ஒரு 100 பேர் மக்களுக்கு உதவி செய்வார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாட்டை தே.மு.தி.க கூட்ட உள்ளது. அதற்கு நிச்சயம் கேப்டன் வருவார். கேப்டனின் மறு உருவமாக விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் இருக்கிறார்கள். தொண்டர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.
தி.மு.க அரசு தகுதி உள்ள பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை என்று கூறுகிறார்கள். வாக்கு கேட்கும் போது தகுதி பார்த்து பெண்களிடம் வாக்கு கேட்கிறீர்களா. யார், யார் வீட்டிற்கோ ரைடு செல்கிறார்கள், முதலில் ரைடு செல்ல வேண்டியது அமைச்சர் துரைமுருகனிடம் தான். தமிழக அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனையோ ஊழல்கள் செய்து வருகிறார்கள்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே லஞ்சம், லாவண்யம், சிறைவாசம் என்று செல்கிறது. நமது கட்சி யாரிடத்திலும் நன்கொடையோ வசூலிப்பதில்லை யாருக்கும் எவ்வித பாகுபாடு பார்ப்பதில்லை. நமது கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த முயற்சியினாலே கட்சியை வலுப்படுத்தி வருகின்றன. ஆகவே வருகின்ற 2024-ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க கூட்டணி இல்லாமல் யாரும் ஜெயித்து விட முடியாது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
கூட்டத்தில் தே.முதி.க துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், தேர்தல் பிரிவு செயலாளர் அழகர்சாமி, பொறியாளர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன், தொண்டரணி துணை செயலாளர் முருகன், தேனி நகர செயலாளர் முருகராஜா உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர் தேனி நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தே.மு.தி.க மாவட்ட அலுவலகம் முன்பு மற்றும் அல்லிநகரம் பகுதியில் கட்சி கொடியை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
R ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments