தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 19.8.2023 அன்று தொடங்கி வைத்து வேலைதேடும் இளைஞர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் பேசுகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் வேலைநாடும் இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கத்தில் தனியார்துறை நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்திரவிட்டார்கள். அதன்படி தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர். பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசு (TNPSC, TRB, SSC, POLICE ) பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
Comments