Skip to main content

தேனி மாவட்டத்தில் நடந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 317 பேருக்கு பணி நியமன ஆணை

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 19.8.2023 அன்று தொடங்கி வைத்து வேலைதேடும் இளைஞர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர்  பேசுகையில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் வேலைநாடும் இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கத்தில் தனியார்துறை நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்திரவிட்டார்கள். அதன்படி தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில் வேலைவாய்ப்புத்துறை மற்றும் மகளிர் திட்டத்தின் வாயிலாக பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தின் மூலம் மாதம் கடைசி வெள்ளிக் கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசு (TNPSC, TRB, SSC, POLICE )  பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் விதங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். முன்னணி நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். மாணவ, மாணவியர்கள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பேசினார். 19.8.2023 அன்று நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 2,858 மாணவர்கள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்தனர். அதில் 317  மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது. மேலும் 248-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே இந்த முகாமில் மொத்தம் 565 பேர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணிகள் உறுதி செய்யப்பட்டது. இந்நிகழ்வில்  பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டி, தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஐசக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

S R.சீனிவாசன், உதவி ஆசிரியர்

R.சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments