Skip to main content

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கவனிப்பு மையத்தினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  தொலைக்காட்சி வசதியுடன்  கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா 18.8.2023 அனங தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அரசின் சார்பில் மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேரும், ஒரு குடும்பத்தில் கணவன். மனைவி அல்லது இருவரும் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளை கவனித்து கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக  மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தின் 3-வது மாடியில் குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன்  கூடிய குழந்தைகள் கவனிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500/- மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

இந்த குழந்தைகள் கவனிப்பு மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இக்கவனிப்பு மையத்தில் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்த மையத்தில் குழந்தைகளுக்கு பால் மற்றும் பழங்கள் தினசரி வழங்கப்பட உள்ளது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு சுழற்சி முறையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி மருத்துவ தேவைக்காக, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் மருத்துவரை அழைத்து மருத்துவம் மேற்கொள்ளவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிந்து, திட்ட இயக்குநர்(குழந்தைகள் நலம்) ராஜராஜேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

R.பாண்டியன், உதவி ஆசிரியர்

R ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments