தேனியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி திருவிழாவை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலாவது மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கூடைப்பந்து விளையாட்டு போட்டி துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் T.ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறவின்முறை விளையாட்டுத்துறை செயலாளர் B.ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் விடுதியின் முன்னாள் மாணவர் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே விளையாடிய போட்டியினை துவக்கி வைத்தார்.
மேலும் இந்த விளையாட்டு போட்டியானது தமிழகத்தில் உள்ள சிறந்த கூடைப்பந்தாட்ட அணியினை தேர்வு செய்து 7.7.2023 முதல் 9.7.2023 வரை நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பிரிவு அணியினருக்கும், நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பிரிவு அணியினருக்கும் நடைபெறுகிறது. இப்போட்டியில் மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 16 அணிகளும், மாணவியர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 6 அணிகளும் பங்கு பெறுகின்றன. இந்த விளையாட்டு போட்டியானது லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறுகிறது.
இதேபோன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடிய போட்டியினை தேனி L.S.மில் சேர்மன் L.S.மணிவண்ணன் அவர்களும், கோவிலூர் சி.எஸ்.எம்.எஸ். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சேலம் லிட்டில் ப்ளவர் மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை தேனி வேல்முருகன் மருத்துவமனை டாக்டர். R.P.V.பிரபு அவர்களும், தூத்துக்குடி செயின் லாசல் மேல்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் M.S.V.மேல்நிலைப்பள்ளி விளையாடிய போட்டியினை திண்டுக்கல் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் லயன் C.செண்பகமூர்த்தி அவர்களும் துவக்கி வைத்தார்கள்.
விளையாட்டு போட்டி துவக்க விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணைமுதல்வர்கள், தலைமையாசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments