தமிழகத்தில் பல குடும்பங்களின் வறுமைக்கு காரணம் டாஸ்மாக் தான் : புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு குறித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, செந்தில் பாலாஜி மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரான பின்பு தான் தமிழகத்தில் தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒரு மதுபான கூடத்திற்கு ரூ.30 லட்சம் பெற்று இந்த தனியார் மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது கண்துடைப்பாக தான் தெரிகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதென்றால் அடுத்தடுத்து எப்போது கடைகள் மூடப்படும் என்று விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா? தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழித்தால் குடும்பத்தில் சேமிப்பு வந்து விடும், அதுபோல பல குடும்பங்களின் வறுமைக்கு காரணம் டாஸ்மாக் தான். தற்போது டாஸ்மாக் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் 25 வயதில் இருந்து 45 வயதுள்ள இளைஞர்கள் டாஸ்மாக் மதுகடைகளால் சரிவர வேலைக்கு செல்ல முடியாததால் தான் வடமாநில தொழிலளர்கள் தமிழகத்திற்கு வந்தனர். அது போல காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறந்தால் குடித்துவிட்டு வேலைக்கு செல்ல மாட்டார்கள். டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக கள்ளு கடைகள் திறக்கலாம் என்று கூறப்படுகிறது. இதிலும் 7 சதவீதம் ஆல்கஹால் இருப்பதால் அதுவும் மனித உடலில் கனையத்தை பாதிக்கும்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. இதில் குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்வோம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம், வீட்டு வரியை உயர்த்த மாட்டோம், மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கீடு, பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய ஆட்சியாக மாறியுள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாதம் ஒருமுறை மின்கட்டணம் எடுக்க வேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து செய்வது, வீட்டு வரி உயர்வை ரத்து செய்வது குறித்து புதிய கட்சி தமிழகம் கட்சி போராட்டம் நடத்தியுள்ளது. அது போல இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமென மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் மற்றும் குடியரசு ஆகிய பின்பு 73 ஆண்டுகளாக அமல்படுத்தாத பொது சிவில் சட்டம் தற்போது அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன ? என கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அப்போது தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாநில துணை அமைப்பு செயலாளர் பாலசுந்தரராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்
K.சரவணன், சிறப்பு நிருபர்
Comments