Skip to main content

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேனி வீரர்கள் சென்னை சென்றனர் : கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்

தேனி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில்  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர்களை சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்சினை தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் 29.6.2023 அன்று கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவிக்கையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட அளவில் கடந்த 8.2.2023 முதல் 24.2.2023 வரை தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5,944 நபர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு 17.6.2023  அன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


இந்நிலையில் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 30.6.2023 முதல்  25.7.2023 வரை சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்திலிருந்து 512 நபர்கள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கில் 30.6.2023 அன்று நடைபெற உள்ள முதல் பிரிவு விளையாட்டு போட்டிகளுக்கு தேனி மாவட்டத்திலிருந்து தேர்வாகியுள்ள 69 வீரர்- வீராங்கனைகள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழத்தில் நடைபெறும் சிலம்பம் விளையாட்டு போட்டியில் 17 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும், நேரு விளையாட்டு அரங்கிங்கில் நடைபெறும் கையுந்து பந்து போட்டியில் 26 பள்ளி மாணவர்களும் மற்றும் கபடி போட்டியில் 26 பள்ளி மாணவர்களும் என மொத்தம் 69 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் அனைவரையும் சிறப்பாக விளையாட வேண்டும், தேனி மாவட்டத்திற்கு பல்வேறு மாநில அளவிலான வெற்றிகளை பெற்று தர வேண்டும் என வெற்றி பெற வாழ்த்துகிறேன் என  தெரிவித்து வழியனுப்புகிறேன் என்றார். 

இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.75,000 மூன்றாம் பரிசாக 50,000 மற்றும் இரட்டையர் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,50,000, இரண்டாம் பரிசாக  ரூ.1,12,000, மூன்றாம் பரிசாக ரூ.75,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதுபோல கபடி, கூடைப்பந்து, கையுந்துப்பந்து போன்ற குழுப்போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.6,00,000, இரண்டாம் பரிசாக ரூ.4,50,000, மூன்றாம் பரிசாக 3,00,000 மற்றும் கால்பந்து, ஹாக்கி போன்ற குழுப்போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.9,00,000, இரண்டாம் பரிசாக ரூ.6,75,000, மூன்றாம் பரிசாக 4,50,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்

R.ராதாகிருஷ்ணன், நிருபர் 

Comments