Skip to main content

தேனி மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க., காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் வேட்பாளர்கள் வெற்றி

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஊரக பகுதியில் 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் 7 உறுப்பினர்கள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். இவற்றில் ஊரக பகுதியில் 5 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகர பகுதியில் 7 பேர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 36 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இதில் நகராட்சி பகுதியில் 176 கவுன்சிலர்களும், பேரூராட்சி பகுதியில் 335 கவுன்சிலர்கள் என மொத்தம் 511 கவுன்சிலர்கள் வாக்காளர்களாக இடம் பெற்றனர். ஒரு வாக்காளர்கள் 7 ஓட்டு வீதம் 3,360 ஓட்டுகள் கணக்கிடப்பட்டது. இதில் 142 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆனது. 

இவற்றில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களான கூடலூர் நகராட்சியை சேர்ந்த தினகரன் 329 ஓட்டுகளும், தேனி அல்லிநகரம் நகராட்சியை சேர்ந்த நாராயண பாண்டியன் 324 ஓட்டுகளும், போடி நகராட்சியை சேர்ந்த ஜெயந்தி 308 ஓட்டுகளும், கோம்பை பேரூராட்சியை சேர்ந்த தங்கராஜ் 308 ஓட்டுகளும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த பவானி 301 ஓட்டுகளும், சின்னமனூர் நகராட்சியை சேர்ந்த (காங்கிரஸ்) நயினார் முகமது 298 ஓட்டுகளும், சின்னமனூர் நகராட்சியை சேர்ந்த ராஜீவ் 295 ஓட்டுகளும் பெற்று மாவட்ட திட்ட குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற 7 உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஜெயபாரதி வழங்கினார்‌ அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், தேனி நகர திமுக முன்னாள் பொறுப்பாளர், கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர். இதனை அடுத்து மாவட்ட திட்ட குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க-வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

G.சிவக்குமார் நிர்வாக ஆசிரியர் 

Comments