தேனியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு : அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 17.6.2023 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,442 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ரூ. 41.58 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை வங்கியில் செலுத்தப்பட்டதற்கான ஆணையினை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி விளையாட்டுத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் வெற்றி பெறுபவர்களை உற்சாகப்படுத்தினால் தான் எதிர்காலங்களில் மேலும் அதிகப்படியான நபர்கள் போட்டியில் பங்கேற்க வருவார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக இதுபோன்ற மாவட்ட அளவிலான பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தான் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில் பெறப்படும் சான்றிதழ்கள் மூலம், கல்வி வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகைகள் பெறலாம் மற்றும் வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட மற்றும் மண்டல அளவில் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2021-22 வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வெற்றியினை பெறுபவர்களுக்கு 1,000, 750, 500 என்ற பரிசுத் தொகையினை மாற்றி நமது முதலமைச்சர் அவர்கள் 3,000, 2,000, 1,000 என்ற பரிசுத் தொகையினை அறிவித்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார்கள். அதன்படி தேனி மாவட்டத்தில் 1,442 நபர்களுக்கு பரிசுத் தொகையாக மட்டும் 41,58,000 வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
முன்னதாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இலச்சி மற்றும் கருப்பொருள் பாடலினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் விளையாட்டு வீரர்கள் பார்வையிடும் வகையில் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மதுமதி, , பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன், துணை ஆட்சியர் (பயிற்சி) முகமது பைசல், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தங்கவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் சி.குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்
Comments