தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் 6.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,
ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள், குடிநீர் வினியோகம், சுத்தம் சுகாதாரம் தொடர்பான பணிகளை தானே நேரடியாகச் சென்று ஆய்வு செய்து குறை நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. அவற்றை கண்காணித்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் விடுதலின்றி கலந்து கொண்டு தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அருகாமையில் குட்கா மற்றும் இதர போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து மாணவர் நலம் பேணும் பொருட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா போன்ற கால கட்டத்தில் சுகாதாரத்துறையுடன் இணைந்து தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
15-வது நிதிக்குழு மானியத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் அதிமாக முடிக்கப்படாமல் உள்ளதால், அவற்றை உடன் முடித்திட தக்க நடிவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பள்ளிக்கு அனுப்பிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் கட்டணம், மின் கட்டணம் நிலுவைத் தொகையினை உடனே செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அபராதம் விதித்திட காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்ற விவரத்தினை தெரிவித்திட வேண்டும்.
நம்ம ஊரு சூப்பர் நிகழ்வு மே முதல் ஜூன் 13-ந் தேதி வரை நடைபெற இருப்பதால் இந்நிகழ்வை சிறப்பாக நடத்தி ஆவணப்படுத்திட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கணவர்களின் தலையீடு உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் ரூபன்சங்கர்ராஜ். உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, சமூக நல அலுவலர் சியாமளா தேவி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சந்தியா மற்றும் ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் உள்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ்
Comments