தேனி மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு அரசின் ஈராண்டு நிறைவு விழாவில் 784 பயனாளிகளுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துதேவன்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் 8.5.2023 அன்று ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு ஈராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், இந்திய திருநாட்டில் தலைசிறந்த முதல்வராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஈராண்டு ஆட்சியின் சாதனையை விளக்கும் வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சி அடைந்து வருவதை இங்கு நடைபெறும் நிகழ்வின் மூலம் காணமுடிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தேனி மாவட்டத்தில், இன்றைய தினம் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்துறை, தொழிலாளர் நலவாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தாட்கோ, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 784 பயனாளிகளுக்கு சுமார் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. யாரிடமிருந்தும் கோரிக்கை வரப்பெற்றாலும் அதனை உடனடியாக தீர்வு கண்டு அனைத்துறைகளின் மூலம் தீர்வு காணப்பட்டு, அதற்குரிய நிவாரணம் உடனடியாக வழங்கும் அரசு தான் தற்போதைய அரசு. மேலும், மகளிர் சிறப்பு திட்;டங்களான இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஆகியன இம்மாநிலத்தின் சிறப்பு திட்டங்களாகும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
இதனை அடுத்து ரூ.8.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையால் தொகுக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தேனி மாவட்ட சாதனை விளக்க புத்தகத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அமைச்சர் வெளியிட்டார். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ந.ராமகிருஷ்ணன்(கம்பம்), ஆ.மகாராஜன்(ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார்(பெரியகுளம்), மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சக்கரவர்த்தி, தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப்ரியா பாலமுருகன் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், லட்சுமணன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க குறும்படம் திரையிடப்பட்டது.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ்
Comments