Skip to main content

தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் 31.5.2023 அன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக  வளர்ச்சி  அலுவலக கூட்டரங்கில் அரசு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் /  பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமையில், மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, உறுதிமொழி குழு உறுப்பினர்கள் / சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), எம்.சக்கரபாணி (வானூர்), எம்.கே.மோகன்  (அண்ணா நகர்),  பி.ராமலிங்கம் (நாமக்கல்) சட்டப்பேரவை செயலாளர்  கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்  கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, சட்டமன்ற பேரவையின் இணைச் செயலாளர் மு.கருணாநிதி, துணைச் செயலாளர் ஸ்ரீ.ரா.ரவி, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் முதல்வர் மரு.அழ.மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார்,  வருவாய் கோட்டாட்சியர்கள் கி.சிந்து (பெரியகுளம்), இரா.பால்பாண்டி (உத்தமபாளையம்) மாவட்ட ஊராட்சி தலைவர் க.ப்ரிதா, துணைத்தலைவர் பெ.ராஜபாண்டியன், நகர் மன்ற தலைவர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிமொழி குழு தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்ததாவது, சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் அறிவிக்கும் திட்டங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் வினாக்கள் அதனடிப்படையில் அறிவிக்கப்படும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இந்த உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.  

அரசு அறிவித்து வருகின்ற  மக்களுக்கான திட்டங்களை இக்குழுவின் மூலம் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடடிவக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 183 உறுதிமொழிகளில் 87 உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 உறுதிமொழி ஆய்வில் உள்ளது. மேலும் 86 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளது. 31.5.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைக்கப்பட்ட வாழை சிப்பம் கட்டும் நிலையத்திற்கான பணிகள் 95 சதவிகிதம் பணிகள் முடிவுற்றுள்ள. மீதமுள்ள 5 சதவிகித பணிகளை விரைந்து முடிவுற்ற பின் வாழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 11 திருப்பணிகளின் புனரமைப்பு பணிகள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைப்போன்று பெரியகுளம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட முன்சீப் நீதிமன்ற கட்டிடம் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ1.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை பழமை மாறாமல் புதுப்பித்து வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தேவதானப்பட்டியில் கட்டப்பட்டுள்ள ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகள் கட்டுமானப்பணிகளை இக்குழு ஆய்வு மேற்கொண்ட போது, அப்பகுதி மக்கள் தெரு விளக்குகள் மற்றும் பூங்கா அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். அதனை விரைந்து நிறைவேற்றிடும் வகையில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை பிரிவு பணிகள் முடிக்கப்பட்டு, சித்த மருத்துவப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், யுனானி, ஆயுர்வேதிக் போன்ற பிரிவுகள் வேண்டும் என கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. அதனை செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதால் இப்பிரிவுகளை செயல்படுத்துவற்கான நடவடிக்கைகளை இக்குழு அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபேரவை உறுதிமொழி குழு சார்பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்த பணிகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவர் தெரிவித்தார்.

R பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments