Skip to main content

தேனி மாவட்டத்தில் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 28.5.2023 அன்று ரூ.32.01 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 68 பயனாளிகளுக்கு ரூ.52.01 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் வரவேற்புரையாற்றினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, அவர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, ஆகியோர் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என்.இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், போடி லட்சுமணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் (மதுரை) வெ.ரகுபதி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் ரூபன் சங்கர்ராஜ், நகர் மன்ற தலைவர்கள் ச.ராஜராஜேஸ்வரி (போடிநாயக்கனூர்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), வனிதா நெப்போலியன் (கம்பம்), பேரூராட்சி மன்ற தலைவர்கள் பொ.சந்திரகலா (ஆண்டிபட்டி), கண்ணன் காளிராமசாமி, (மேலச்சொக்கநாதபுரம்), ரா.முருகேஸ்வரி (தேவதானப்பட்டி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் போது நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துக்கின்ற வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி, அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டாண்டுகளில் தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிக்களுக்கு மட்டும் ரூ.130 கோடியே 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல பேரூராட்சிகளுக்கு ரூ.267 கோடியே 9 இலட்சம் நிதியினை வழங்கி உள்ளார்கள். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.323 கோடியே 61 இலட்சம் நிதியினை வழங்கி உள்ளார்கள். உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி, மேலச்சொக்கநாதபுரம், தென்கரை, வடுகப்பட்டி மற்றும் ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு ரூ.162 கோடியே 8 இலட்சம் நிதியினை வழங்கி உள்ளார்கள். அதனடிப்படையில், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கான ரூ.17.02 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ரூ.14.99 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் என ரூ.32.01 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதனைப்போன்று, போடிநாயக்கனூர் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.106.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நூற்றாண்டு நிறைவு நிதி திட்டத்தின் கீழ்; ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், தேவதானப்பட்டி பேரூராட்சியில் மூலதன மான்யம் நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, பெரியகுளம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.75.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காயிதே மில்லத் நகர் பூங்கா  ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சின்னராஜ் பூங்கா, கம்பம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் நந்த கோபாலசாமி நகர் பூங்கா, வார்டு எண்:14ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24.96 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை வார்டு எண்:27ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.24.96 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை என மொத்தம் ரூ.112.67 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தேனி மாவட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகள் மட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஊரக வளர்;ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தேனி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு, அவர்களுடைய மேற்பார்வையில் அரசின் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் வைத்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 7800 பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதனைப்போன்று, 100 நாள் வேலை திட்டத்தினையும், சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதேபோன்று விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்ர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியினை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செயல்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி என்றாலும், எல்லோருக்கும் எல்லாம் என்பதினை கருத்தில் கொண்டு, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதிலுள்ள மக்களுக்கு தேவையான திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டிலேயே மிகவும் சுத்தமான, சுவையான குடிநீர் கிடைக்க கூடிய நகரம் என்றால் அது போடிநாயக்கனூர் நகரம். தினந்தோறும் போடிநாயக்கனூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு கிடைக்கின்ற வகையில் குடிநீர் திட்டத்தினை சீர்படுத்துவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து, குறுகிய காலத்திலேயே குடிநீர் திட்டப்பணிகளை முடித்து, 30 வருடகாலத்திற்கு தேவையான  குடிநீர் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து தேவையான நிதியினை பெற்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக பல்லாயிரம் கோடி அளவிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேவையான திட்டங்களை செயல்படுத்தி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்துப்பட்டு வரும் திட்டங்களை கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

S.R.சீனிவாசன் உதவி ஆசிரியர் 

Comments