தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மதிவேந்தன் அவர்களை 19.5.23 அன்று மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் முத்துராமன், செயலாளர் ராஜேஸ்வரன் பொருளாளர் கண்ணன், உபதலைவர் சந்திரராஜா, உப செயலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், மேகமலை மலை மேல் புலத்தில் விவசாயம் செய்து கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை மனுவாக உங்களின் கணிவான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். அந்த மனுவில், தேனி மாவட்டம் மேகமலையில் விளையக்கூடிய காபி உலகத்தின் தரக் குறியீட்டில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. அதேபோல் ஏலக்காய் மிகவும் தரமானதாகவும் விளைகின்றது. இது போன்ற அந்நிய செலாவணியை ஈட்டு தரக்கூடிய விவசாயத்தையும் விவசாயிகளையும்
முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மேகமலை புலிகள் சரணாலய (DD) துணை இயக்குனர் ஆனந்த் அதை உங்கள் முன் வகைப்படுத்துகின்றோம்
மேகமலையில் சுமார் மூன்றாயிரம் (3,000) ஏக்கர் காப்பி, ஏலம், மிளகு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. இதில் செடிகளை அகற்றி இடை நாற்று நடுவதற்கு அரசு பண்ணைகளிலிருந்து எடுத்து வரும் நாற்றுகளை வன சோதனைச் சாவடிகளில் கடந்து செல்ல வனத்துறை தடுக்கிறது. (சின்னமனூர், தென்பழனி வன சோதனை சாவடி கடமலைக்குண்டு, மஞ்சனுத்து வனசோதனை சாவடி)
காப்பி பழம் அரைப்பதற்கு தேவையான இயந்திரத்தில் பழுது ஏற்பட்டாலோ ஏலக்காய் பதப்படுத்தும் டிரையரில் வலை அடுப்பு பைப் லைன் போன்றவைகள் பழுது ஏற்பட்டாலோ சரி செய்து எடுத்து வர வன சோதனை சாவடியில் அனுமதி மறுக்கப்படுகின்றது.மிக முக்கியமாக காலங்காலமாக கடந்த 1930 முதல் பயன்படுத்திய வந்த வண்டிப்பாதையை (மணலார் to வெள்ளிமலை பாதை) தற்பொழுது புலிகள் சரணாலயம் என்று கூறி அப்பாதையை பயன்படுத்த தடை விதித்து விட்டனர். இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம், அது சார்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதையை பயன்படுத்த மறுக்கப்படுவதால் நோய்வாய் பட்ட தொழிலாளர்களையும், விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களையும், நாங்கள் 9 to 12 கிலோ மீட்டர் வரை டோலி கட்டி எடுத்து வந்து அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கியமான சூழ்நிலை நிலவுகிறது.
கோடைகாலத்தில் வறட்சியால் பாதிக்கப்படுகின்ற பயிர்களை காப்பாற்ற அரசு மானியத்தில் கொடுக்கக்கூடிய பண்ணை குட்டை அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், நீர் தேக்க தொட்டி அமைத்தல் போன்றவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. மேலும் நிழல் தரும் மரங்களின் கிளைகளை அகற்றவும் அனுமதி மறுக்கப்படுகிறது
அதுபோல பயிர்களுக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்லவும், தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொருட்களை எடுத்து செல்லவும், விளைந்த விளை பொருட்களை எடுத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே தமிழ்நாடு முதல்வர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையை பரிசீலித்து எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று மாநில வனத்துறை தலைமை தலைவர் அவர்களையும், தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தனி செயலாளர் முருகானந்தம் அவர்களையும் மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments