தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி 17.5.2023 அன்று தொடங்கியது. இதில் போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்தில் போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்ட இராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 18 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.22,500-க்கான இயற்கை மரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு ரூ.2,500 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி, உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் ஆகிய 5 தாலுகா பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகங்களில் 17.5.2023 முதல் 26.5.2023 வரை (19.05.2023 மற்றும் 22.05.2023 ஆகிய நாட்கள் நீங்கலாக) வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ளது.
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-ல் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் சம்பந்தம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
17.5.2023 அன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)-யில் ஆண்டிபட்டி வட்டத்தில் 171 மனுக்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 108 மனுக்களும், பெரியகுளம் வட்டத்தில் 92 மனுக்களும், தேனி வட்டத்தில் 214 மனுக்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 64 மனுக்களும் என மொத்தம் 649 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு பயன்கள் உடன் வழங்கிட மாவட்ட கலெக்டர் ஷஜீவனா சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) ஜஸ்டின் சாந்தப்பா, போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அழகுமணி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்
Comments