Skip to main content

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் தேரோட்டம்: கலெக்டர் ஷஜீவனா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவில் 12.5.2023 அன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு திருக்கோயில்களை பாதுகாத்திடும் பொருட்டும், அதில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், இசைக்கலைஞர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் பணிபுரிகின்ற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துக்கின்ற வகையிலும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுககு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது.

தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா 9.5.2023 முதல் தொடங்கப்பட்டு 16.5.2023 வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 12.5.2023 அன்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களால் வடம் பிடித்து தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் 16.5.2023 வரை நடைபெறவுள்ள இத்திருவிழாவில், பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாத வண்ணம் உள்ளே சென்று, வெளியே வருவதற்கு தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பக்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, ஒலி பெருக்கியின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருவிழாவிற்கு அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வீரபாண்டிக்கு வருகை தந்து, அருள்மிகு கௌமாரியம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திண்டுக்கல்) பா.பாரதி, தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எம்.சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார், கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் உள்பட ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் 

Comments