Skip to main content

மேகமலை பகுதியில் தரமான காபி ஏலம் மிளகு நாற்றுகள் கொண்டு செல்ல வனத்துறை தடையால் பொருளாதார இழப்பு

 தேனி மாவட்டம், தேனி - வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கம்பெனி அலுவலக வளாகத்தில் மேகமலை பிளான்டர்ஸ் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க முதல் பொதுக்குழு கூட்டம் தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் சிதம்பர கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- காபி, ஏலம், மிளகு நாற்றுகளை அரசு நாற்று பண்ணைகளில் இருந்து எடுத்து வருவதற்கு வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து விடுகின்றனர். இதனால் தரமான காபி, ஏலக்காய், மிளகு உற்பத்தி செய்வதை வனத்துறையினர்  தடுப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே சோதனை சாவடியில் விவசாய பொருட்கள் எடுத்து வரும் வாகனத்தை அனுமதிக்க வேண்டும்.

 எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் விஷ பூச்சி கடித்தால் அவர்களை வாகனத்தில் எடுத்து செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை, இதனால் நாங்கள் டோலி மூலம் தூக்கி சென்று  சிகிச்சை அளிக்க முயற்சிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடைபெற்று வருகிறது.

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது பண்ணை குட்டை (அரசுமானியத்துடன்)  அமைத்து நீர் பாய்ச்சுவதற்கு வனத்துறையினர் தடை விதிக்க கூடாது.

அதுபோல மேகமலை விவசாய பகுதியில் வேலையை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்ப செல்ல சோதனை சாவடியில்  அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க இணைச்செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.

Comments