தேனி காட்ரோடு பகுதியில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்: அமைச்சர்கள், திரை உலக பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்
தேனி, ஜூன்.11-
தமிழ் திரைப்பட உலகில் என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்ற கம்பீரக் குரலால் தனக்கென முத்திரை பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாரதிராஜா தனது 84-வது வயதில் உடல்நல குறைவால் 10.6.2026 அன்று காலமானார். இதன்பின்னர் பாரதிராஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து பாரதிராஜாவின் உடல் அவரது பிறந்த சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள காட்ரோடு பகுதியில் உள்ள அவரது தோப்பு வளாகத்தில் 11.6.2026 அன்று 72 குண்டுகள் முழங்க அரசு மரியாவுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக தமிழக அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் மற்றும் போலீசார் தமிழக அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நடிகர் வடிவேல், பாடலாசிரியர் வைரமுத்து, பாரதிராஜாவின் உறவினர்கள், தமிழ் திரை உலக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மறைவையொட்டி தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு, வினாரா பவுண்டேஷன், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் பாரதிராஜாவின் ரசிகர்கள் சார்பில் 10.6.2026 அன்று தேனி பங்களாமேடு பகுதியில் பாரதிராஜாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வினோரா பவுண்டேஷன் இயக்குனர் வி.ஆர்.ராஜன், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம் மற்றும் தேனி நகர முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இதேபோன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், பாரதிராஜாவின் ரசிகர்கள் சார்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் திரை உலகில் இயக்குனர் இமயம் என்ற பட்டத்துக்குரிய பாரதிராஜா தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம், கீரைக்கல் பஜார் தெருவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்
செல் : 9842145271









Comments