Skip to main content

வைகை அணையை தூர்வார வேண்டும்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் வலியுறுத்தல்

தேனி, ஜூன்.1-

தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அணையை உடனடியாக தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மாநில பொதுச்செயலாளர்  வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
வைகை அணையை, மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த அணையின் நீர் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் அடிப்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் படிவங்களை அகற்றும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
"வைகை அணையின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் தூர்வாரும் பணிகள் மிகவும் அவசியமானவை. தற்போதைய குறைந்த நீர்மட்ட நிலை, இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாகும். தமிழக அரசும், பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், வைகை அணை நீரால் பயன்பெறும் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

"வைகை அணை என்பது வெறும் அணை அல்ல; தென் தமிழக மக்களின் உயிர்நாடி. அதன் நீர்த்தேக்க திறனை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும், அரசின் கடமையும் ஆகும்." என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 
செல் : 9842145271

Comments