தேனி, ஏப்.21-
தேனி வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேனி மாவட்ட வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 21.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் மாரப்பன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் செல்வ மனோகரன், செல்வன், பாலமுருகன் பாண்டி மணி, ஹரிஹர சுதன், ராமகிருஷ்ணன் உள்பட வக்கீல்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள மதுரை சாலையை மறித்து வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லை! மக்களின் பாதுகாப்பு எங்கே! என்றும், வக்கீல் செல்வ மனோகரன் கொடுத்த புகாரில் எதிரிகளை கைது செய்ய வேண்டும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வக்கீல் செல்வ மனோகரன் அவர்களை அழைத்து சென்று சித்திரவதை செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. வக்கீல் செல்வ மனோகரன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமியிடம் வக்கீல்கள் கொடுத்து, கோரிக்கை மனுவின் தன்மை குறித்து விளக்கி கூறினர்.
................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments